Tuesday, March 9, 2010

ஜெயமோகனை ஏன் நிராகரிக்கவேண்டும்?


சடைமுடி, புலித்தோல், உத்திராட்சம், கமண்டலம் போன்றவை இல்லாவிட்டாலும் ஜெயமோகன் மனசளவில் தன்னை ஒரு மகரிஷியாகவே அனுமானித்துக்கொள்கிறார். அவரது வலைத்தள ஆசிரமத்துக்கு சிஷ்யகோடிகள் நித்தம் நித்தம் பல நூறு கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் இண்டர்நெட் வழியாக சந்தேக நிவாரணமும் தீட்சையும் அளித்து வருகிறார் ஜெயமோகானந்தா.

அவர் அளிக்கும் நீளநீளமான பதில்களை படிக்கும்போது முழு நிஷ்டையில் இருக்கும்போது எழுதினாரா அல்லது பாதி கலைந்த நிலையில் எழுதினாரா என்னும் சந்தேகம் ஏற்படுவதை தடுக்கமுடியாது. இந்து ஞான மரபின் மொத்த கொள்முதல் உரிமையாளராகத் தன்னை பாவித்துக்கொண்டு இந்த மகரிஷி அளிக்கும் விளக்கங்களை அற்பப் பதர்களால் புரிந்துகொண்டுவிடமுடியாது. இருந்தாலும் இவ்வளவு நீளமாக ஏதேதோ சமஸ்கிருதம் கலந்து எழுதியிருக்கிறாரே நிச்சயம் இதில் ஏதோ விஷயம் இருக்கும் என்று பக்தர்கள் கண்ணீர் மலங்க வாசித்து முக்தி பெறுகிறார்கள். இலக்கியத்தில் பல மாய யதார்த்த சித்து வேலைகள் செய்து வந்த ஜெ அது அதிகம் போணியாகாததால் இப்போது முழு நேரமும் பித்து வேலைகளே செய்து வருகிறார்.

இதோ ஒரு சிஷ்ய கடிதம்.

அன்புள்ள ஜெ, நான் ஒரு நவீன குருவின் ஆன்மீகப்பயிற்சி முறையில் சில பயிற்சிகளைச் செய்துவருகிறேன். கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக. அது எனக்கு மிகப்பெரிய மன ஆற்றலை அளித்திருக்கிறது என்று உணர்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் உள்ள பதற்றங்கள் குறைந்தன. நான் திட்டவட்டமாக வாழ்க்கையை எதிர்கொள்ள அது எனக்கு உதவியது.

இப்போது இன்னொரு சாமியார் பற்றிவந்த செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. ஏனென்றால் என்னை மாதிரியே இவரை நம்பி இவர் காட்டிய வழிகளில் சென்று பயனடைந்த பலரை நான் அறிவேன். அவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்துப்போய் இருக்கிறார்கள். சிலர் அவரை வசைபாடுகிறார்கள். சிலர் அவரை விடமுடியாமல் எல்லாமே மோசடி என்று சொல்கிறார்கள்.

நான் கேட்பதெல்லாம் அவரது யோகமுறைகள் மூலம் நாம் அடைந்த நன்மைகளை எப்படி நாம் நிராகரிக்க முடியும் என்றுதான். அவை உண்மையானவை தானே. அவரை தூக்கி வீசுவதுபோல அவர் சொன்ன விஷயங்களை முழுக்க தூக்கி வீசி விடமுடியுமா என்ன?

நான் இன்று ஒரு அமைப்பை அல்லது குருவை நம்பிக்கொண்டிருக்கிறேன் ஜெ. நாளைக்கு அந்த நம்பிக்கை இல்லாமலானால் என் நிலைமை என்ன ஆவது? அதற்கு நான் எப்படி என்னை தயார்ப்படுத்திக்கொள்வது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்கள் வரிகள் என்னை தெளிவாக்கக் கூடும் என்று நினைக்கிறேன். சிவ.சண்முகம்

இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிடவேண்டும். சிவ. சண்முகம், கார்த்திக் சிதம்பரம், குமரகுருபன் என்று எண்ணற்ற புனைப் பெயர்களில் ஜெ தனக்குத்தானே மடல்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்று இலக்கிய, ஆன்மிகப் பீடத்தில் பலர் குற்றம் சுமத்துகிறார்கள். இலக்கியத்தில் இதெல்லாம் சகஜம் என்பதால் நாம் இந்தக் குற்றச்சாட்டுக்குள் இப்போது நுழைய போவதில்லை. மேலும், இப்படி திருவிளையாடல் சிவாஜி மாதிரி பாட்டும் நானே, பாவமும் நானே என்று தனக்குத்தானே கேள்விகள் கேட்டுக்கொள்வது இந்து ஞான மரபின் ஒரு கூறாக அல்லது அங்கமாகவும் இருக்கக்கூடும், யாருக்கு தெரியும்?

சரி, ஆதௌ கீர்த்தனாராம்பத்திலே நாம் பார்த்த கேள்விக்கு ஜெ அளிக்கும் விடைக்கு வருவோம்.

ஒட்டுமொத்த இந்து ஞானமரபை, இந்து ஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை, சிறுமைப்படுத்துவதாக அது அமையுமே என்றுதான் எனக்கும் தோன்றியது. திட்டமிட்ட சிறுமைப்படுத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் கண்டிப்பாக இது ஓர் அடிதான்.

ஆனால், ஓர் இந்துவாக உண்மையாக இருக்கும்பட்சத்தில் சத்தியம் தர்மம் என்ற இரு அம்சங்கள்மீது மட்டுமே ஒருவன் பற்றுள்ளவனாக இருக்க வேண்டும். அமைப்புகள், தனிமனிதர்கள், கோட்பாடுகள் நம்பிக்கைகள் எதன்மீதும் அல்ல. அந்நிலையில் இந்த விஷயத்தில் எது உண்மையோ அது வெளிவரட்டும், எது தர்மமோ அது நிலைநாட்டப்படட்டும் என்று மட்டுமே அவன் எண்ண வேண்டும். அந்த நினைப்பு என் சஞ்சலத்தைப் போக்கியது.

மனித மொழியில் இதை மொழிபெயர்த்தால் கீழ்கண்டவாறு புரிந்துகொள்ளலாம்.

1) இந்து ஞானமரபை சிறுமைப்படுத்தும் செயல் நீண்டகாலமாகவே இங்கே நடந்துகொண்டிருக்கிறது. அதாவது இந்துக்களை வீழ்த்த சிலர் வஞ்சகமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அதன் ஒருபகுதியாக நித்யானந்தா அம்பலப்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கெனவே துவண்டு போயிருக்கும் ஞானமரபுக்கு இது ஓர் அடி.

2) நித்யாவைக் கண்டு பக்தர்கள் துவண்டு விடக்கூடாது. ஐயோ ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்று புலம்பக்கூடாது. இன்னும் இது போல் எத்தனையோ பேர் அம்பலப்படுத்தப்படலாம். நீங்கள் நம்பிய இன்னும் பல சாமியார்கள் உங்களை கைவிடலாம். இதுபோல் இன்னும் எத்தனையோ ஏமாற்றங்களை இந்து மதம் உங்களுக்கு அளிக்கலாம். ஆனால் நீங்கள் மதத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். இறுதியில் உண்மை நிலைநாட்டப்படும். சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும்.

பெரியவா, சின்னவா, பால பெரியவா, தேவநாதா, நித்யானந்தா என்று அனைவரும் உங்களை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருப்பார்கள். நீங்கள் நம்பிய மகா புருஷர்கள் உங்களை கைவிடுவார்கள். ஆனால், நீங்கள் இந்து மதத்தை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது. நாம் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளவேண்டும்.

மற்றொரு இடத்தில், ஜெ இவ்வாறு எழுதுகிறார்.

இந்து மரபில் மூன்று கூறுகள் உள்ளன என்று சொல்லலாம். ஒன்று, தத்துவார்த்தமான தளம். இரண்டு , வழிபாடு,பக்தி சார்ந்த தளம். மூன்று, பழங்குடி நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த தளம். முதல்தளம் தியானம் போன்றவற்றையும், இரண்டாம் தளம் அந்தரங்கமான பக்தியையும் வழிபாடுகளையும், மூன்றாம்தளம் கூட்டுக்கொண்டாட்டமான வழிபாடுகளையும் முன்வைக்கிறது.

ஜெ சொல்படி பார்த்தால், நித்யானந்தா இந்த மூன்று தளங்களிலும் ஒரே சமயத்தில் இயங்கியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். கதவை திற, மனதை திற டைப்பில் தத்துவங்களை நிறைய வாரி பொழிந்திருக்கிறார். அவரது அந்தரங்கமான பக்தி இரண்டாவது தளத்தில் அம்பலப்பட்டுப்போனது. மூன்றாவது தளத்தில் வெளிபட்ட அவரது கொண்டாட்டமான வழிபாடுகள் நக்கீரன் சைட்டில் காணக்கிடைக்கின்றன.

இதுபோன்ற சாமியார்கள் ஏன் தோன்றுகிறார்கள் என்பதற்கு ஜெ இவ்வாறு பதிலளிக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டு அறிவின் நூற்றாண்டு என்று கண்ட முன்னோடி ஞானிகள் இந்து தத்துவ தளத்தை பரவலாக மக்களுக்குக் கொண்டு செல்ல அமைப்புகளை உருவாக்கினர். ராமகிருஷ்ண மடம் அவற்றில் முக்கியமானது. காலம் மாற மாற இந்து தத்துவ மரபை நவீன சிந்தனைகளுடன் உரையாடச்செய்து முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது.

நித்யா மாட்டிக்கொண்டதால் இந்து மரபுக்கு எந்த கேடுகாலமும் வந்துவிடாது என்பதை எவ்வளவு அழுத்தமாக ஜெ பதிவு செய்திருக்கிறார் பாருங்கள்.

நித்யானந்தர் மாட்டிக்கொண்டது சமீப காலமாக நடந்துவரும் ஊடகப் படையெடுப்பின் ஒரு விளைவு. ஆனால் இதன்மூலம் ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அந்நம்பிக்கையை இழக்க மாட்டார்கள். ஏற்கனவே சாய்பாபாவைப்பற்றி இதேபோல எத்தனையோ படங்கள் வெளிவந்தன. அவரது ஆசிரமத்திலேயே பாலியல்கொலைகள் நடந்தன. அவரது பக்தர்கள் அதை பகவானின் லீலை என்றே எடுத்துக்கொண்டார்கள். அவரை பயன்படுத்திய எத்தர்கள் அவர் லாபகரமாக இருக்கும்வரை அவரை விடமாட்டார்கள். ஆக அவருக்கு எந்தப்பாதிப்பும் நிகழவில்லை.

ஆயிரம் அடி வாங்கினாலும், நாம் ஒரு குருவின் பின்னால் தான் ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்பதை ஜெ வலியுறுத்துகிறார்.

குரு ஒரு வழிகாட்டி மட்டுமே. நாம் சென்று சேரும் புள்ளி அல்ல அவர். அவர் வழியாக நாம் சென்றுகொண்டிருக்கிறோம். அவரை நாம் கடந்துசெல்வதும்கூட சாத்தியமே. நாம் தேர்ந்துகொண்ட வழிக்கு ஏற்ப நம்முடைய இயல்புக்கு ஏற்ப நாம் குருநாதர்களை அடைகிறோம். முழுமையான மெய்ஞானிகூட ஒருவனுக்கு அவனது வழியைத்தான் காட்டமுடியும். அவனது ஞானமென்பது அவனே அடைவதாகவே இருக்கும்.

வீராவேசமாகவும் முத்தாய்ப்பாகவும் ஜெ உதிர்த்த முத்து இது.

இன்று இழிவுபட்டு நிற்பது நித்யானந்தர் என்ற மனிதரே ஒழிய எந்த மரபின் தோற்றத்தை அவர் தன் வேஷமாகக் கொண்டாரோ அந்த தோற்றம் அல்ல. அந்த வேறுபாட்டை இல்லாமலாக்கி நித்யானந்தரை முன்வைத்து இந்து மரபை எள்ளிநகையாட, சிறுமைசெய்ய முயல்வார்கள் என்பது உண்மையே. ஆனால் காலம்தோறும் எந்த மோசடியாளனும் எளிதில் அணியக்கூடியதாகவே காவி இருந்துள்ளது. ஆனாலும் காவியுடை அதன் தனித்துவத்துடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்து மதத்துக்கு எப்போது தீங்கு நேர்ந்தாலும் அங்கே பிரசன்னமாகி தடுத்தாட்கொள்ள முயல்கிறார் ஜெ. சமஸ்கிருத சுலோபம், கீதோபநிஷத் என்று பலவற்றில் இருந்தும் கொட்டேஷன்களை உருவிப் போட்டு, சாதனா, கைவல்யம், பிரபஞ்ச பிரம்மாண்டம், பதஞ்சலி யோகம், தாந்தரீகம், மாந்தரீகம், ஹடயோக வித்தை என்று பயமுறுத்தும் பதங்களை சேர்த்துப் போட்டு, ஹைஸ்பீட் டைப் ரைட்டிங்கில் ஏகப்பட்ட தத்துவங்களை உதிர்த்துக்கொண்டு போகிறார் ஜெ. ஆன்மிகம், போலி ஆன்மிகம் என்னும் தலைப்பில் அதிரடியாக ஒரு குறும்தொடரையும் ஆரம்பித்துவிட்டார்.

ஜெயமோகனின் தத்துவங்களை அகராதி கொண்டு மொழிபெயர்த்தால் நமக்குக் கிடைக்கும் இறுதி செய்தி ஒன்றுதான். இந்த நித்யாவை மட்டுமல்ல இன்னும் பல நூறு நித்யாக்களை நீங்கள் அம்பலப்படுத்தினாலும், காவிக்கொடி இமயத்தின் உச்சத்தில் பட்டொளி வீசி பறந்துகொண்டுதான் இருக்கும். இந்து ஞானமரபின் பொன்னுடல் மறைந்தாலும் அதன் பூதவுடல் மறையாது.

இனி, ஜெயமோகனை நாம் ஏன் நிராகரிக்கவேண்டும் என்பதற்கான காரணங்களை பட்டியலிடுவோம்.

1) சாமியார்கள் உருவாவதற்கான அடித்தளத்தை இவர் உருவாக்குகிறார், பலப்படுத்துகிறார்.

2) நித்யானந்தாவை அவர் நிராகரித்தாலும், குரு வழிபாட்டையும் சாமியார் வழிபாட்டையும் அவர் நிராகரிக்கவில்லை.

3) போலிகள் அம்பலப்பட்டு போகும்போது, அவர்கள் சார்ந்துள்ள இந்து மதம் பாதிப்படையாதவாறு தாங்கிப் பிடித்துக்கொள்கிறார்.

4) அசல் ஆன்மிகம், போலி ஆன்மிகம் என்று இரு பிரிவுகளை வசதியாக ஏற்படுத்திக்கொண்டு மக்களை குழப்புகிறார், ஏமாற்றுகிறார்.

5) இந்து மத சித்தாந்தம் என்னும் பெயரில் ஆபத்தான அரசியல் பிரசாரங்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்துவருகிறார். (உதாரணம், இந்துக்களுக்கு எதிராக ஒரு கூட்டம் வஞ்சகம் செய்கிறது போன்ற விஷமங்கள்).

6) பிஜேபி போன்ற இந்துத்துவா சக்திகளின் இலக்கிய, அரசியல் குரலாக இயங்கிவருகிறார்.

7) பெரியாருக்கு எதிராக, அம்பேத்கருக்கு எதிராக, கம்யூனிசத்துக்கு எதிராக பொய் பிரசாரங்களை, திட்டமிட்ட அவதூறுகளை கட்டவிழ்த்துவிடுகிறார்.

8) இந்து மத அடையாளத்தை செழுமைப்படுத்தும் வகையில், காந்தியை புனிதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

9) இந்து மதத்தின் மீது மக்களுக்கு விரக்தியோ வெறுப்போ ஏற்படாதவாறு கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்.

குறிப்புகள் :

ஜெயமோகனின் ஆசிரமத்துக்குச் செல்லும் வழி இது. இத்தனை நடந்த பிறகு, நித்யானந்தர் என்னும் பெயர் கொண்ட இன்னொரு சாமியார் பற்றி இங்கே சிலாகித்து எழுதியிருக்கிறார். சாமியாரின் பல ஆபாசமான புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். மேலே மேற்கோள் காட்டப்பட்ட அவரது கட்டுரைகளின் தலைப்புகள் - ஜாக்ரதை, ஆனமிகம், போலி ஆன்மிகம் 1-5 பகுதிகள்.

தொடர்புடைய முந்தைய கட்டுரை - நித்யானந்தாவும் நிவேதிதானந்தாவும்

Thursday, March 4, 2010

நித்யானந்தாவும் நிவேதிதானந்தாவும்


வலைப்பதிவுகளைச் சுற்றிப்பார்த்து உலக அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்று நான் ஆர்வத்துடன் முயற்சி செய்துகொண்டிருந்த சமயம் பார்த்து இத்தனை கூத்துகள் நடைபெறுவதை என்னவென்று சொல்ல? எங்கு திரும்பினும் அவன் படம், அவன் புகழ், அவனது காணொளி காட்சிகள், அவன் குறித்த கதம்ப விவாதங்கள். தூணிலும் அவன்தான், துரும்பிலும் அவன்தான்.

என் கண்களால் நம்பவேமுடியவில்லை! சாரு நிவேதிதாவின் வலைத்தளம் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கிறது. முந்தா நாள் பார்த்த நித்யாவின் படம் நேற்று இல்லை. நேற்று பார்த்த ஒரு பதிவு இன்று இல்லை. இன்று இருக்கும் வலைப்பதிவு நேற்றையது போல் இல்லை. புகைப்படம், எழுத்துகள், வடிவம், உருவம் அனைத்துமே மாறிக்கொண்டிருக்கின்றன. பழைய கட்டுரைகள் காணக்கிடைக்கவில்லை. புதியவை மாயமாக மறைகின்றன. நித்யநிலையாமைத் தத்துவம் இன்று இதனை அழைக்கலாமா?



நித்யா முழுவதுமாக அம்பலப்பட்டுப்போன இந்தத் தருணத்தில், சாருவால் மழையில் நனைந்த கோழிபோல் வெடவெடவென்று தடுமாற மட்டுமே முடிகிறது. சும்மா சும்மா ஏன் என்னையும் அவரையும் லிங் பண்ணுகிறாய் என்று அறச்சீற்றத்தை எழுப்புகிறார். அவன் ஃபோட்டோவை என் சைட்டில் போட்டால், அவன் செய்யும் தவறுகள் என்னுடையதாகிவிடுமா என்று தர்க்கம் செய்கிறார். மறுகணமே, அவனை நம்பி நான் ஏமாந்துட்டேனே அதுகூட உங்களுக்குத் தெரியலையா என்று உடைந்து அழுகிறார். நான் அழுதால் அதற்காக என் கண்ணீரை ஏன் துடைத்துவிடுகிறாய் என்று தன் வாசகர்கள் மீது விழுந்து பிராண்டுகிறார். பிறகு, ஆயிரம் இருந்தாலும் அவன் ஒரு ஞானிதான் என்று சிலாகிக்கிறார். ஆசிரமத்துக்குச் சென்றுள்ள தன் மனைவியின் உயிருக்கு ஆபத்து என்று பிதற்றுகிறார்.

பிறகு, இப்படியும் சொல்கிறார்.

'இப்போதும் சொல்கிறேன், நித்யானந்தர் எழுதிய புத்தகங்கள் 300 இருக்கும். அத்தனையும் நம் இந்திய ஆன்மீகத்தின் சாரம். கீதைக்கு அவர் எழுதியிருக்கும் பிரம்மாண்டமான உரை ஒரு அற்புதம். நித்யானந்தர் ஒரு முட்டாள் அல்ல; நூறு மேதைகளுக்கு சமமான அறிவுத் திறன் கொண்டவர். அந்த அறிவுத் திறனை அவர் சொத்து சேர்க்கவும், நடிகைகளுடன் சல்லாபம் செய்யவும் பயன்படுத்திக் கொண்டு விட்டார்.'

ஐயா, நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்? நித்யானந்தர் முட்டாள் அல்ல என்றால் வேறு யார் முட்டாள்? எனக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று நீங்கள் சொல்லிவிட்டதால் நீங்களும் முட்டாள் இல்லை என்றாகிவிட்டது. பிறகு யார்தான் முட்டாள்? உங்கள் எழுத்துகளைப் படிப்பவர்களா? உங்கள் பேச்சைக் கேட்டு நித்யாவிடம் ஓடியவர்களா? உங்களைத் தலைக்குமேலே தூக்கிவைத்துக்கொண்டு ஆடும் உள்நாட்டு, வெளிநாட்டு ரசிகர்களா? குறைந்தபட்சம் அதையாவது நேர்மையாகச் சொல்லுங்களேன்.

சாருவைப் பொருத்தவரை, நித்யா செய்த தவறுகள் மூன்று. சொத்து சேர்த்தது. நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது. இந்த இரண்டையும் சாமியார் என்று வேஷம் போட்டுக்கொண்டு செய்தது. இதோ சாருவே சொல்கிறார்.

'நான் மிக வெளிப்படையாகவே I like wine, women and gods என்று சொல்லிக் கொள்பவன். இவ்வளவு வெளிப்படையாக இருக்கும் ஒரு மனிதனை - ஒரு எழுத்தாளனை உங்களால் சொல்ல முடியுமா? நித்யானந்தரோ ஊருக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை உபதேசம் செய்து விட்டு .... (பிரசுரிக்க முடியாத வார்த்தைகள்). அப்படிப்பட்ட அயோக்கியனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் கண்டீர்கள்?'

இருக்கிறது, ஐயா. சம்பந்தம் இருக்கிறது. சொல்லவா?

1) நித்யா சொல்லாமல் செய்யும் சமாசாரங்களை நீங்கள் சொல்லிவிட்டு செய்கிறீர்கள்.

2) உங்கள் இருவர் பின்னாலும் ஒரு மதிகெட்ட கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது.

3) நீங்கள் இருவரும் இந்து ஆன்மிகத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

4) நீங்கள் இருவருமே, நான்தான் மேதாவி, மற்றவர்கள் எல்லாம் சும்மா என்று சொல்லிக்கொள்கிறீர்கள்.

5) நீங்கள் இருவருமே உங்கள் வார்த்தைகளுக்கு உண்மையாக இருப்பதில்லை. ஊருக்கு ஒரு நியாயம், தனக்கு ஒரு நியாயம்.

6) தவறுகள் அம்பலப்படுத்தப்படும்வரை நீங்கள் உத்தமர்களாகத்தான் உங்களைக் காட்டிக்கொள்கிறீர்கள்.

7) இவ்வளவு நடந்த பிறகு, நித்யா பல்டி அடித்து எங்கோ ஓடிப்போய்விட்டார். நீங்கள் எங்கும் செல்லவில்லை. ஆனால், தொடர்ந்து பல்டி அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

8) நீங்கள் இருவருமே ஒட்டுண்ணிகள்.

9) அவமானத்தைத் துடைத்துப்போட்டுவிட்டு எதுவுமே நடக்காததுபோல் சிரிக்கத் தெரிந்த கபடதாரிகள் நீங்கள்.

10)விதவிதமான உங்கள் புகைப்படங்களை வைத்து ரசிகர்களை வலைவீசிப் பிடிக்கும் வஞ்சகர்கள் நீங்கள்.

11) நீங்கள் இருவருமே பெண்களை போகப்பொருளாக மட்டுமே காண்கிறீர்கள்.

12) உங்கள் இருவருக்குமே ஒரு மாயத்தோற்றம் தேவைப்படுகிறது. அதைப் பெறுவதற்காகவே நீங்கள் இருவரும் உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

13) நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதற்கான ஒரு மந்தையை நீங்கள் இருவருமே உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்.

14) நீங்கள் இருவருமே வியாபாரிகள். பணத்துக்காக எதையும் செய்ய தயங்காதவர்கள்.

15) சமுதாயத்தைச் சுரண்டிக்கொண்டே சமுதாயம் சாக்கடை என்று குற்றம் சாட்டுபவர்கள் நீங்கள்.

16) வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று நீங்கள் பினாத்துவதைக் கேட்க உங்கள் இருவருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தை நம்பித்தான் உங்கள் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.

17) உங்கள் இருவரது ஆன்மிகமும் பொய், உங்கள் இருவரது சித்தாந்தமும் ஆபத்தானவை.

18) இதுகூட கடந்து செல்லும் என்று முணுமுணுத்தபடி அடுத்த பதிவை எழுதவும், கை உயர்த்தி அடுத்த ஆசியை வழங்கவும் நீங்கள் இருவரும் தயாராகிவிட்டீர்கள்.

அடுத்து, நித்ய சைதன்யரின் சேஷ்ட சிஷ்யர் ஜெயமோகனாந்தாவின் பதிவுலக ஆசிரமத்துக்குச் செல்வோம்.

Tuesday, February 23, 2010

யார் இந்த மானிடன்?

என் போதாத காலம் சென்ற வாரம் ஆரம்பித்தது. நண்பர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக உரையாடல் blogs பக்கம் திரும்பியது. நீ அதிகம் விரும்பி படிக்கும் blog எது? நண்பன் திடீரென்று கேட்டதும் நான் திகைத்துவிட்டேன். இணையதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருப்பவன்தான் என்றாலும் blogs பார்ப்பதில்லை. எனவே, தயக்கத்துடன், தெரியாது என்று பதிலளி்த்தேன்.

'என்னது தெரியாதா? நம்ம சாருவோட் ப்ளாக் கூட பார்த்ததில்லையா?'

'இல்லை'

'ஜெயமோகன்?'

'இல்லை'

'எஸ்.ரா?'

'இல்லை'

இன்னு்ம் இரண்டு, மூன்று எழுத்தாளர்களின் பெயர்களைச் சொன்னார்கள். என் அறியாமையின் ஆழத்தைக் கண்டு அவர்களுக்கு பரிதாப உணர்வு தோன்றியிருக்கவேண்டும். பக்கத்தில் வந்து உட்கார்ந்து, என் நோட் புக்கைப் பிரித்து சில இணைய முகவரிகளை எழுதிக்கொடுத்தார்கள். மாற்றி, மாற்றி ஒவ்வொருவராக வாங்கி எழுதினார்கள். கிட்டத்தட்ட பதினைந்து முகவரிகள் இருந்தன.

'முதல்ல, இவங்களைப் படி. அப்பத்தான் உனக்கு உலகம் புரியும்.'

உலகத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்னும் தீரா காதல் கொண்டவன் என்பதால், அன்று இரவே என் வேட்டையை ஆரம்பித்துவிட்டேன். ஒரு வாரம் முழுவதும் வெளியில் எங்கு்ம் செல்லாமல் ஒவ்வொரு வலைப்பதிவையும் கவனமாக படித்தேன். பின்னூட்டம், பதிவு, அனானி, சாட்டிங், ட்விட்டிங், கூகுள் அனாலிடிக்ஸ், தமிழ்மணம் என்று ஒரு புதிய உலகம் கண்முன் விரிந்தது. நண்பர்கள் கொடுத்த முகவரிகள் அல்லாது வேறு சிலவற்றையும் கண்டுபிடித்தேன்.

கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்து சேர்ந்தேன்.

1) பான்பராக், பீடி, சிகரெட், கஞ்சா, அபி்ன், பிரவுன் சுகர் போன்றவற்றை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பது எத்தனை தீங்கானதோ அத்தனை தீங்கானது கெட்ட வலைப்பதிவுகளை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பதும்.

2) எது நன்மை தரும் என்பதைச் சொன்னால்தான் எது தீங்கானது என்பது புரியும். எனவே, பயனளிக்கும் கருத்துகளை, ஆரோக்கியமான சிந்தனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

அதற்கு ஒரே வழி நீ ஒரு வலைப்பதிவு ஆரம்பிப்பதுதான் என்று நண்பர்கள் சொன்னார்கள். அதற்கான அடித்தளத்தையும் அவர்களே உருவாக்கி கொடுத்தார்கள்.

எனக்குத் தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். மாற்று கருத்து இருந்தால் விவாதியுங்கள்.

மாறவும், மாற்றவும் துடிக்கும் ஒவ்வொருவருக்கும், தோழமையுடன்.

மானிடன்.